தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் தான் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் தான் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்திய ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்தார். அதன் பின், கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த அவர் அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத அணியாக பஞ்சாப் கிங்ஸ் வலுவாக உள்ளது.
Advertisement
இந்த நிலையில், நிகழ்காலத்தில் இருப்பதுதான் தன்னுடைய வெற்றிக்கான ரகசியம் என ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் கோப்பையை வெல்வதே இலக்கு. ஆனால், நிகழ்காலத்தில் இருப்பதுதான் மிகவும் முக்கியம் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். எதிர்காலம் குறித்து அதிகம் யோசிக்கத் தேவையில்லை. அதேபோன்று கடந்து காலத்திலும் தங்கிவிடத் தேவையில்லை. இதனையே என்னுடைய அணி வீரர்களிடத்திலும் கூறுகிறேன். நாம் நமக்காக விளையாடுகிறோம், எதிரணிக்காக அல்ல. ஒவ்வொரு நாளும் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.