குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் தில்லி கேப்பிடல்ஸ் அணி மோதிய இன்றைய ஐபிஎல் போட்டியில், டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தார் தில்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த்.
குஜராத் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு, சாஹா, டேவிட் மில்லர், சந்தீப் வாரியர் (உமேஷ் யாதவுக்கு பதிலாக) அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் தொடக்க வீரர்கள் கில் 8 ரன்களுக்கும், சாஹா 2 ரன்களுக்கும் நடையைக் கட்டினர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட குஜராத் அணி பவர் பிளேவில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ரஷித் கான் 31 ரன்கள் சேர்த்தார்.
தில்லி அணியில் முகேஷ் குமார் 3, இஷாந்த் சர்மா 2, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2, ஜ்கலீல் அகமது 1, அக்சர் பட்டேல் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இறுதியில், 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
இதையடுத்து, 90 ரன்கள் வெற்றி இலக்குடன் தில்லி அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் ஜேக் ப்ரேஸர் 20 ரன்களுக்கும், பிரித்வி ஷா 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய, அபிஷேக் போரெல் 15 ரன்களுக்கும், ஷாய் ஹோப் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், 8.5 ஓவர்களில் தில்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், 67 பந்துகள் வீசப்படாமலே, அதற்கு முன் இலக்கை துரத்திப் பிடித்துள்ளது தில்லி கேப்பிடல்ஸ் அணி. அந்த வகையில், ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸ் அணி விளையாடிய போட்டிகளில், அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றியைப் பதிவு செய்துள்ளது தில்லி கேப்பிடல்ஸ் அணி.