மும்பையைத் தோற்கடித்து, பிறந்தநாளுக்குச் சிறப்பு சேர்த்த விராட் கோலிக்கு அனுஷ்கா சர்மா நன்றி!
இந்நாளைச் சிறந்தநாளாக மாற்றியதற்கு மிக்க நன்றி அன்பே என்று எழுதியுள்ளார்...
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் 31-வது ஆட்டம் பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்றது. புள்ளிகள் பட்டியலில் 6-ஆம் இடத்தில் உள்ள மும்பைக்கும், 7-ஆம் இடத்தில் உள்ள பெங்களூருவுக்கும் இந்த ஆட்டம் வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்தது. முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. மும்பை தரப்பில் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், மெக்ளேனகன், பும்ரா, மார்கண்டே தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆனால் மும்பையால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால் பெங்களூரு அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியைத் தழுவியது. பெங்களூரு தரப்பில் செளதி, உமேஷ், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 6-வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி 7-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஆட்டம் முடிந்தபிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய கோலி, இதுபோன்ற ஒரு பங்களிப்பைதான் எதிர்பார்த்தோம். இன்று அது நடந்துள்ளது. என் மனைவி அனுஷ்கா சர்மா இங்கு உள்ளார். இன்று அவருடைய பிறந்தநாள். நாங்கள் வெற்றி பெறுவதை அவர் பார்த்ததைக் கண்டு நான் மகிழ்கிறேன். அவர் முன்னிலையில் இரு புள்ளிகளை எடுத்ததை எண்ணியும் மகிழ்கிறேன் என்று கூறினார்.
ஆட்டம் முடிந்தபிறகு இன்ஸ்டகிராமில் அனுஷ்கா சர்மா தெரிவித்ததாவது: சிறந்த பிறந்தநாள், அருமையான, உலகின் துணிச்சலான மனிதருடன். இந்நாளைச் சிறந்தநாளாக மாற்றியதற்கு மிக்க நன்றி அன்பே என்று எழுதியுள்ளார்.