2022 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஆடவர் டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
அடுத்த வருடம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நியூசிலாந்தில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறுவதாக இருந்தது. இந்தப் போட்டியை 2022 பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு ஐசிசி ஒத்திவைத்துள்ளது. அதே வருடம் தென் ஆப்பிரிக்காவில் மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அரசியல் காரணங்களால் நடைபெறவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகளைப் பகிர்ந்தளித்துள்ளது ஐசிசி. இதன்மூலமாக இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா (37), இங்கிலாந்து (29) மற்றும் தென் ஆப்பிரிக்கா (25) ஆகிய அணிகள் தகுதி பெற்றன. ஐந்தாவது அணியாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 17 புள்ளிகளுடன் உள்ள நியூஸிலாந்து அணி, போட்டியை நடத்தும் நாடு என்பதன் அடிப்படையில் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது. இந்த ஐந்து அணிகளோடு மீதமுள்ள 3 அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன.
இந்நிலையில் 2022 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் கூறியுள்ளார். வர்ணனையாளராக மாறியுள்ள கிரிக்கெட் வீராங்கனை லிசா ட்விட்டரில் தெரிவித்ததாவது: உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக உள்ள மிதாலி ராஜ், ஜூலான் கோஸ்வாமி, ரேச்சல் ஹெய்ன்ஸ் போன்ற வீராங்கனைகள் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்றார்.
இதற்குப் பதில் அளித்த மிதாலி ராஜ் கூறியதாவது:
கண்டிப்பாக. உலகக் கோப்பையின் மீது கண்களை ஆழமாகப் பதித்துள்ளேன். சிறு காயங்களிலிருந்து மீண்டு, உடலும் மனமும் மும்பை விடவும் புத்துணர்ச்சியுடன் உள்ளன. எனவே 2022 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.