முகப்பு
செய்திகள்

ஐபிஎல்லில் இப்படி நடக்காது: கிரிக்கெட் சங்கம் உறுதி

அணி வீரர்களும் இந்த மைதானத்தில் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்குச் சாதகமான மைதானமாக இது இருக்க வேண்டும்.

Updated On : 1 பிப்ரவரி 2023, 1:50 pm IST
பகிர்:

டி20 ஆட்டத்தில் நடந்தது போல ஐபிஎல் போட்டியில் குளறுபடிகள் நடக்காது என உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் உறுதியளித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாண்டியா தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்த ஆடுகளம் அதிர்ச்சியளிக்கிறது என்றார் பாண்டியா. அந்த ஆட்டத்தில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 30 ஓவர்களைச் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீசினார்கள். மேலும் எந்த ஒரு பேட்டராலும் ஒரு சிக்ஸரும் அடிக்க முடியவில்லை. 

Advertisement

Advertisement

டி20 கிரிக்கெட்டுக்கு உகந்தவாறு ஆடுகளம் வடிவமைக்காத காரணத்துக்காக லக்னெள எகானா மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மூத்த ஆடுகள வடிவமைப்பாளரான சஞ்சீவ் குமார் அகர்வால் தேர்வானதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒரு பேட்டியில் கூறியதாவது:

லக்னெள மைதானத்தைக் கவனித்துள்ள இரு நிபுணர்களைப் பணியில் அமர்த்தப் போகிறோம். ஒருவர் ஆடுகளத்தையும் மற்றொருவர் மைதானத்தின் தன்மைகளையும் கவனித்துக்கொள்வார்கள். அவர்களுடைய சேவையைப் பெற இதர கிரிக்கெட் சங்கங்களின் அனுமதியைப் பெறவுள்ளோம் என்று கூறியுள்ளார். அதேபோல ஆடுகள வடிவமைப்பாளரை நீக்கியதையும் அவர் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

லக்னெள மைதானம், ஆடுகளத்தின் வசதிகள் தரமாக அமைவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். ஐபிஎல் போட்டியில் இதுபோல நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. அணி வீரர்களும் இந்த மைதானத்தில் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்குச் சாதகமான மைதானமாக இது இருக்க வேண்டும். ஐபிஎல் போட்டியின்போது எல்லா ஏற்பாடுகளும் சரியாக அமைந்து, எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று கூறியுள்ளார். 

ஐபிஎல் போட்டியில் லக்னெள சூப்பர் ஜெயண்ட் அணி இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஐபிஎல்  ஆட்டங்கள் லக்னெளவில் நடைபெற்றிருந்தாலும் முதல்முறையாக லக்னெள நகருக்கான ஐபிஎல் அணி இந்த மைதானத்தில் விளையாடவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments