வெளியேறியது இந்திய மகளிர் அணி
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 0-5 என சீனாவிடம் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறியது.
முதல் டையில் டென்மார்க்கிடம் தோற்ற இந்தியா, அடுத்த டையில் உக்ரைனை வீழ்த்தியது. குரூப் சுற்றின் கடைசி டையில், 16 முறை சாம்பியனான சீனாவுக்கு எதிராகத் தோல்வி கண்ட இந்தியா, காலிறுதி வாய்ப்பை இழந்தது.
இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற இந்த டையில், முதலில் ஒற்றையர் மோதலில், பி.வி.சிந்து 16-21, 21-19, 19-21 என்ற கேம்களில் வாங் ஜி யிவிடம், 1 மணிநேரம், 18 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தார்.
Advertisement
அடுத்து இரட்டையர் பிரிவு மோதலில், பிரியா கொன்ஜெங்பம்/ஸ்ருதி மிஸ்ரா ஜோடி 11-21, 8-21 என்ற கணக்கில், லியு செங் ஷு/டான் நிங் இணையிடம் 34 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவியது.
3-ஆவது ஆட்டத்தில் இஷாராணி பருவா 20-22, 13-21 என்ற கேம்களில் சென் யு ஃபெய்யிடம் 44 நிமிஷங்களில் தோல்வியுற்றார்.
2-ஆவது இரட்டையர் மோதலில் தனிஷா கிராஸ்டோ/கவிபிரியா செல்வம் இணை 21-10, 12-21, 19-21 என்ற வகையில், லுவோ ஜு மின்/ஜாங் ஷு ஜியான் கூட்டணியிடம் 59 நிமிஷங்கள் போராடித் தோற்றது.
கடைசியாக நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில், தேவிகா சிஹக் 21-19, 17-21, 10-21 என்ற கேம்களில் ஜு வென் ஜிங்கிடம் 58 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவினார்.
போட்டியிலிருந்து இந்திய மகளிர் அணி வெளியேறிவிட்ட நிலையில், தாமஸ் கோப்பை போட்டியில் இந்திய ஆடவர் அணி களத்தில் உள்ளது. காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள ஆடவர் அணி, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பலம் வாய்ந்த சீனாவை புதன்கிழமை (ஏப். 29) சந்திக்கிறது.