ஆட்ட நாயகன் நெய்மர்..! இனவெறிக்கு உள்ளான வினிசியஸுக்கு ஆதரவாக கொண்டாட்டம்!
ஆட்ட நாயகன் விருது வென்ற கால்பந்து வீரர் நெய்மர் குறித்து...
கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் சந்தோஷ் கிளப்பிற்கு விளையாடிய போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் சந்தோஷ் எஃப்சி கிளப்பில் விளையாட வந்த நெய்மர் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மர் (32 வயது) சந்தோஷ் எஃப்சி கிளப்பில் விளையாடி வருகிறார். முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, மீண்டும் புத்துணர்ச்சியுடன் விளையாடி வருகிறார்.
முந்தைய போட்டியில் அசிஸ்ட் செய்திருந்த நெய்மர், இந்தப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் ஜூன் மாதம் முதல் அமெரிகா, கனடாவில் நடைபெற இருக்கின்றன. பிரேசில் அணியில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் நெய்மர் விளையாடி வருகிறார்.
வினிசியஸுக்கு ஆதரவாக நெய்மர்
சாம்பியன்ஸ் லீக்கில் முதல்கட்ட பிளே-ஆஃப்ஸ் போட்டியில் பென்ஃபிகா அணியினர் ரியல் மாட்ரின் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் மீது இனவெறி ரீதியான கமெண்ட் செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.
இந்தக் காரணத்தினால், இரண்டாம் கட்ட பிளே-ஆஃப்ஸ் போட்டியில் குற்றம்சாட்டப்பட்ட பென்ஃபிகா அணி வீரர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
வினிசியஸ் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரைப் போலவே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு தனது ஆதரவை நெய்மர் வெளிப்பட்டுத்தியுள்ளார்.
கால்பந்து என்றால் இப்படித்தான்...
போட்டிக்குப் பிறகு பேசிய நெய்மர், “கடந்த வாரம் என்னை மிகவும் மோசமான வீரர்கள் என்று பேசினார்கள். இன்று 2 கோல்கள் அடித்ததும் என்னை மிகச்சிறந்த வீரர்கள் என்கிறார்கள். அதுதான் கால்பந்து.
சில நாள்களில் நாம் நன்றாக விளையாடமாட்டோம். ஓய்வு பெற தோன்றும். சில நாள்களில் உலகக் கோப்பைக்கு தேர்வாக வேண்டுமென பலர் சொல்லுமளவுக்கு நன்றாக விளையாடுவோம்.
என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான அளவில் விளையாட முயற்சிக்கிறேன். மூன்றில் இரண்டு முறை 90 நிமிஷங்களும் விளையாடி இருக்கிறேன். கடைசியில் சற்று தசைப் பிடிப்பு ஏற்பட்டது. வினிசியஸ் சமீபத்தில் இனவெறிக்கு ஆளானார் அதனால், ஆதரவாக அவரைப் போல கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன்” என்றார்.