பயிற்சிதான் காரணம்... ஆட்ட நாயகன் முகமது சிராஜ் பேட்டி!
ஆட்ட நாயகன் விருது வென்ற முகமது சிராஜ் பேட்டி குறித்து...
ஆட்ட நாயகன் விருது வென்ற முகமது சிராஜ் பேட்டியின்போது, “உலகக் கோப்பையில் நான் விளையாடாதபோது எனது பந்துவீச்சில் பயிற்சி செய்தேன். குறிப்பாக பந்தை எப்படி வெளியிடுகிறேன் என்பதில் கவனம் செலுத்தினேன்” எனக் கூறியுள்ளார்.
நேற்றிரவு (மே.21) நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 229/4 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் முகமது சிராஜ் தனது முதல் பந்திலேயே சஞ்சு சாம்சனை வீழ்த்தினார். பின்னர் ருதுராஜ், உர்வில் படேல் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். அவர் வீசிய 3 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
Advertisement
Advertisement
சிறப்பாக பந்துவீசியதால், முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது வென்றார். அதன்பிறகு அவர் பேசியிருப்பதாவது:
ஐபிஎல் தொடருக்கு முன்பாக டி20 உலகக் கோப்பையின்போது நான் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தேன். அப்போது மிகவும் கடுமையாகப் பயிற்சி செய்தேன். குறிப்பாக பந்தை எப்படி வெளியிடுகிறேன் என்பதில் கவனம் செலுத்தினேன்.
முதல் 3-4 போட்டிகளில் எனக்கு சரியான ரிதம் கிடைக்கவில்லை. பின்னர் எங்கு தவறு செய்கிறேன் என எனது விடியோக்களை திரும்பவும் பார்த்து சரிசெய்துகொண்டேன். தற்போதைக்கு எனது கையில் இருந்து பந்து மிகவும் அழகாக வருகிறது.
பயிற்சியின்போது நான் புதிய பந்தில் பந்துவீசுவேன். என்னுடைய லைன், லெந்த் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பேன். அந்த உணர்வு வந்தவுடன் இரண்டு மூன்று ஓவர்கள் யார்க்கர் வீசி பழகுவேன் என்றார்.