முகப்பு
தமிழ்நாடு

பஸ்கள் மோதல்: 4 மாணவிகள் சாவு; 34 பேர் காயம்

தருமபுரி அருகே 2 தனியார் கல்லூரி பஸ்கள் வெள்ளிக்கிழமை மாலை நேருக்குநேர் மோதிக் கொண்டதில்

Updated On : 2 மார்ச், 2013 at 3:15 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

தருமபுரி அருகே 2 தனியார் கல்லூரி பஸ்கள் வெள்ளிக்கிழமை மாலை நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 4 மாணவிகள் உயிரிழந்தனர்.

தருமபுரியை அடுத்துள்ள நல்லானூரில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதேபோல, ஆட்டுக்காரன்பட்டியில் தனியார் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த 2 கல்லூரிகளிலும் பயிலும் தருமபுரி, அரூர் உள்ளிட்ட 5 வட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி பஸ்களில் வந்து செல்கின்றனர்.

 ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள கல்லூரியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குச் செல்ல ஒரு பஸ்ஸில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

 இதேபோல, நல்லானூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து தருமபுரிக்கு ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது.

 இந்த 2 பஸ்களும் பி.மல்லாபுரம் என்ற இடத்தில் வந்த போது, நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், 2 பஸ்களின் முன்பகுதி இருக்கைகள் பெயர்ந்ததில் மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர்.

 மாணவ, மாணவிகளின் அலறல் சப்தம் கேட்டு, சுற்றுப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அங்கு ஓடிவந்தனர். பென்னாகரம் டிஎஸ்பி நடராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

 காயமடைந்த மாணவ, மாணவிகளை ஆம்புலன்ஸ்களில் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த விபத்தில், தனியார் கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்த தின்னனூரைச் சேர்ந்த மாணவி ஸ்ரீதேவி (19), இவருடன் படித்த மற்றொரு மாணவியான பென்னாகரம் சமத்துவபுரம், அண்ணாநகரைச் சேர்ந்த பானுஸ்ரீ (20), பொறியியல் கல்லூரியில் எம்சிஏ இரண்டாமாண்டு படித்த சப்பாணிபட்டியைச் சேர்ந்த மாணவி குமுதா (20), பி.இ. இறுதியாண்டு பயின்ற காரிமங்கலத்தைச் சேர்ந்த மாணவி காயத்ரி (24) ஆகியோர் உயிரிழந்தனர்.

 மேலும் காயமடைந்த 15 மாணவர்கள், 19 மாணவிகள் என 34 பேர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 2 மாணவிகள், ஒரு மாணவரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.

 விபத்து நிகழ்ந்த தகவலறிந்து 2 கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி, எஸ்.பி. ஆஸ்ரா கர்க் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்த மாணவிகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

 இந்த விபத்தால் தருமபுரி- ஒகேனக்கல் சாலையில் சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.