முகப்பு
தமிழ்நாடு

இலங்கை சிறையில் இருந்து தூத்துக்குடி மீனவர்கள் விடுவிப்பு

இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி தருவைகுளத்தைச்

Updated On : 12 மார்ச், 2013 at 12:36 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 8 நாள்களுக்குப் பின்னர் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) இரவு தூத்துக்குடி வந்தடைவர் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.

 தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள் மாணிக்கம் (24), அப்பாஸ் (59), நிஜாம் (45,) அப்பாஸ் (38), ரபீக் (42), ஆல்பர்ட் (27), சகாயமணி (25), குமார் (21), கென்னடி (50), ராபின் (26), மேன்லி (23), ராஜன் (27), ரூபன் (23), செல்வராஜ் (55), தொம்மை அந்தோனி (50), முருகன் (35) ஆகிய 16 பேர் 3 விசைப்படகுகளில் கடந்த மாதம் 27ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

Advertisement

இந்நிலையில், 16 மீனவர்களையும் தங்கள் கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் மார்ச் 3ஆம் தேதி பிடித்துச் சென்றனர்.  இதுதொடர்பாக, அவர்களது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து, 16 மீனவர்களையும் விடுவிக்க அரசு நவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 16 மீனவர்களும் இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் 16 பேரையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். இந்நிலையில், புத்தளம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட 16 மீனவர்களையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்தத் தகவலை சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரான ராபின் தருவைகுளத்தில் உள்ள உறவினர்

அந்தோனி முத்துவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் தருவைகுளம் பகுதியில் பரவியதும் மீனவர் சங்க அலுவலகம் முன் திரண்ட பொதுமக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கூறியது:

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) மாலை 4 மணிக்குமேல் தூத்துக்குடி கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படுவர். பின்னர், அவர்கள் தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை இரவுக்குள் அழைத்துவரப்படுவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.