முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சூரிய ஒளியைப் பயன்படுத்தி வரையும் சித்திரங்கள்!

எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.

Updated On : 14 ஜூன் 2026, 4:11 am IST
பகிர்:

எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.

சூரிய ஒளியை பூதக்கண்ணாடி வழியாக மரப் பலகையில் செலுத்தி ஓவியம் வரையும் வெகு சிலரில் ஒருவரான விக்னேஷ் கூறியது:

'பாலிடெக்னிக் படித்துவிட்டு, தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தேன். உடல்நலப் பிரச்னை காரணமாக 30 நாள்கள் படுக்கையில் கட்டாய ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.

Advertisement

Advertisement

அந்த நேரத்தில் சூரிய ஒளியைக் கொண்டு ஓவியங்கள் வரையும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான கலைஞர் மைக்கேல் பாபடகிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த காணொலிகளைப் பார்த்து, நானும் வரைந்தேன். திரும்பத் திரும்பப் பார்த்து நுணுக்கங்களை அறிந்தேன்.

தொடக்கத்தில் சூரிய ஒளியில் பெயர்களை பல வடிவங்களில் உருவாக்கினேன். சிறிய உருவப்படங்கள் வரைய ஆரம்பித்து, இப்போது ஆளுயரப் படங்களை வரைய முடிகிற அளவுக்குத் திறமையை மேம்படுத்தியுள்ளேன். பிரபலமானவர்களின் நூற்றுக்கணக்கான உருவப்படங்கள், கலைப்படைப்புகள், பென்சில் ஓவியங்களையும் வரைந்துள்ளேன்.

சூரிய ஒளியைப் பயன்படுத்தி மரப்பலகையில் செதுக்கிய 'டெஸ்லா' சின்னத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தேன். இதை அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சில வாரங்கள் பகிர்ந்தது. கரோனா காலத்தில் எனது கலைப்படைப்புகள் இணையத்தில் வைரலாகின.

நடிகர் கமல்ஹாசன் ரசிகரான நான், அவருடைய முகத்தை வரைந்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தேன். திடீரென்று ஒருநாள் கமல்ஹாசன் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பின்பேரில், நான் வரைந்த படத்துடன் சென்று கமலிடம் கொடுத்து பாராட்டுகளைப் பெற்றேன்.

சூரிய ஒளி கொண்டு ஓவியம் வரைய வெயில் தேவை. வெயிலில் நின்று ஓவியம் வரையும்போது, கையுறை, தொப்பி, கூலிங் கிளாஸ்களை அணிவேன். ரப்பர் மரப் பலகைகளை ஓவியத்தை வரைய மூன்றுவித குவிலென்ஸ்களைப் பயன்படுத்தி, சூரிய ஒளியைக் குவித்து பலகையின் மேல்புறத்தை தேவைக்கு ஏற்றது போல எரிப்பேன். வரையப்படும் உருவம், வடிவமைப்பு, படத்துக்கு அளிக்க விரும்பும் அர்த்தம் ஆகியவற்றைப் பொறுத்து, லென்ஸை மரப் பலகையிலிருந்து விலக்கியோ அல்லது அருகிலோ தொடர்ந்து நகர்த்துவேன்.

பூதக்கண்ணாடியை வெவ்வேறு கோணங்களில் பிடிப்பதன் மூலம் மரத்தின் மேல்புறத்தைப் பக்குவமாக எரித்து ஓவியத்தை உருவாக்குகிறேன். தற்போது பெரிய அளவில் சிவன் ஓவியத்தை வரைந்து வருகிறேன். நல்ல வெயில் இருக்கும் நாள்களில் ஏ4 அளவுள்ள ஒரு கலைப்படைப்பை முடிக்க மூன்று நாள்களாகும். மேகமூட்டமான நாள்களில் பத்து நாள்கள் வரை நீளும். எனது படைப்புகளை கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விற்று வருகின்றேன்.

எனது படைப்புகளைக் கண்காட்சியாக விரைவில் நடத்த உள்ளேன். இந்தக் கலை வடிவத்தைக் கற்பிக்கவும் வகுப்புகளைத் தொடங்குவேன்'' என்கிறார் விக்னேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.