முகப்பு
தமிழ்நாடு

கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு:அடுத்த தேர்தலில் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க உத்தரவு

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர் பதவிக்கு அடுத்த தேர்தலில் இடஒதுக்கீடு அளிப்பது பற்றி அரசு பரிசீலிக்க

Updated On : 2 ஏப்ரல், 2013 at 5:04 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர் பதவிக்கு அடுத்த தேர்தலில் இடஒதுக்கீடு அளிப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை எம்.ஆர்.சி. நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் துரை குணசேகரன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 5-ம் தேதி முதல் நான்கு கட்டங்களாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் இந்தத் தேர்தலில் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் பதவிக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.

Advertisement

இந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலில் பெண்களுக்கு 30 சதவீதமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவீதமும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். எனினும் எனது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி என்.பால் வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.பழனிமுத்து, 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கு நடைபெறும் தேர்தலில் அச்சங்கங்களின் தலைவர் பதவியில் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படாதது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆகவே, இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் பதவிக்கு அடுத்து வரும் தேர்தலில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.