கடலோரக் காவல் படையில் "வைபவ்'
அதிநவீன வசதிகள் கொண்ட ரோந்துக் கப்பலான "வைபவ்' இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டது. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில்
அதிநவீன வசதிகள் கொண்ட ரோந்துக் கப்பலான "வைபவ்' இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டது. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இதற்கான விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய கடலோரக் காவல் படையில் கடந்த 27 ஆண்டுகளாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த "வீரா' என்ற ரோந்துக் கப்பல் தனது சேவையை திங்கள்கிழமையுடன் முடித்துக்கொண்டது.
இதையடுத்து, இந்திய கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவில் வீரா கப்பலுக்குப் பதிலாக அதிநவீன வசதிகள் கொண்ட வைபவ் என்ற ரோந்துக் கப்பல் இணைக்கப்பட்டது. இதற்கான விழா தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள 8-ஆவது தளத்தில் நடைபெற்றது.
Advertisement
இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் அனுராக் ஜி தப்ளியாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய கப்பலை இந்திய கடலோரக் காவல் படையில் இணைத்தார். நிகழ்ச்சியில், கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல் படை துணைத் தலைவர் எஸ்.பி. சர்மா, வைபவ் ரோந்துக் கப்பலின் கட்டளை அதிகாரி சஞ்சீவ் திரிக் ஷா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், திருநெல்வேலி சரக டிஐஜி சுமித்சரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிநவீன ரோந்துக் கப்பலான வைபவ் 90 மீட்டர் நீளம் கொண்டதாகும். அதிநவீன ஆயுதங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகளுடன், இரண்டு அதிவேக படகுகள், ஹெலிகாப்டர் இறங்குதளம், ராடார் கருவிகள் உள்ளிட்டவை உள்ளன.
ஏறத்தாழ 4 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட இந்தக் கப்பல் மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியதாகும். 4500 கடல் மைல் தொலைவு வரை தொடர்ந்து பயணிக்கும் வகையில் கப்பலில் அனைத்து வசதிகளும், தொடர்ந்து 15 நாள்கள் வரை கடலில் பயணம் செய்யும் திறன் கொண்ட வசதிகளும் உள்ளன. மேலும், இரண்டு ராட்சத டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
1940 டன் எடை கொண்ட இந்தக் கப்பலில் 84 கடலோரக் காவல் படை வீரர்களும் 10 அதிகாரிகளும் பணியில் இருப்பர். கடலில் ரோந்து செல்வது, விபத்தில் சிக்கும் மீனவர்களை மீட்பது, கடல்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவது, கடலில் ஏற்படும் சிறிய அளவிலான எண்ணெய்க் கசிவுகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை வைபவ் ரோந்துக் கப்பல் கவனிக்கும் என இந்திய கடலோரக் காவல் படை தலைமை இயக்குநர் அனுராக் ஜி தப்ளியாள் தெரிவித்தார்.