சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகாமி அம்மன் தேர் ரூ.32 லட்சத்தில் புனரமைப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகாமி அம்மன் தேர் ரூ.32 லட்சம் செலவில் புனரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகாமி அம்மன் தேர் ரூ.32 லட்சம் செலவில் புனரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5 தேர்கள் உள்ளன. இவற்றில், நடராஜப் பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் பெரியத் தேர்கள் உள்ளன. விநாயகர், முருகன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய மூவருக்கும் சிறிய தேர்கள் உள்ளன.
÷நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் ஆகிய இரு உற்சவங்கள் நடைபெறும். இந்த உற்சவத்தில் 9-ம் நாள் திருவிழாவாக தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
÷தேர் உற்சவத்திற்கான செலவுத்தொகை பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிறது. நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் தேர்களை பச்சையப்பன் அறக்கட்டளை பராமரிப்பு செய்து வருகிறது.
÷இந்நிலையில் சிவகாமி அம்மன் தேர் பழுதுற்றுள்ளதால், அத்தேரை புனரமைக்க பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் உத்தரவிட்டுள்ளார்.
÷அதன் பேரில் தேரை புனரமைக்க காஞ்சிபுரம், மயிலாடுதுறை பகுதியிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, ரூ.32 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ÷டி.என்.சேஷன் நேரடி மேற்பார்வையில் பொறியாளர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
÷சிவகாமி அம்மன் தேர் முற்றிலுமாக பிரிக்கப்பட்டு, புதிதாக புனரமைக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் 13, 14 தேதிகளில் நடைபெறவுள்ள தேர் மற்றும் தரிசன உற்சவத்திற்குள் தேர் புனரமைக்கப்பட்டு விடும் என கோயில் பொதுதீட்சிதர்கள் தெரிவித்தனர்.