ரூ. 40,000 லஞ்சம்: அம்பத்தூர் வட்டாட்சியர் கைது
சென்னை அம்பத்தூர் பகுதியில் அடகுக் கடை உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அம்பத்தூர் பகுதியில் அடகுக் கடை உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஆவடி திருமுல்லைராஜபுரத்தைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (35). இவர் அம்பத்தூர் வட்டார அடகுக்கடை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளராக உள்ளார். குமார் அப் பகுதியில் உள்ள அடகுக் கடை உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பங்களை பரிசீலித்த அம்பத்தூர் வட்டாட்சியர் நாகேஸ்வரராவ், உரிமங்களைப் புதுப்பிக்க ரூ.80 ஆயிரம் வேண்டும் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதையடுத்து நரேஷ்குமார், அவரிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி, லஞ்ச பணத்தை ரூ.40 ஆயிரமாக குறைத்தாராம். மேலும் அவர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை செய்தனர். இதில் நாகேஸ்வரராவ் லஞ்சம் கேட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாம். இதையடுத்து போலீஸார் நரேஷ்குமாரிடம் மை தடவிய ரூ.40 ஆயிரத்தை கொடுத்து, அதை நாகேஸ்வரராவிடம் கொடுக்கும்படி கூறினர். அதன்படி திங்கள்கிழமை இரவு நரேஷ்குமார், நாகேஸ்வரராவிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்ற போலீஸார், நாகேஸ்வரராவை கையும்களவுமாக பிடித்தனர். இதைத் தொடர்ந்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.