காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
பருவ மழை பொய்த்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. தருமபுரி மாவட்டம் வழியாக பாயும் காவிரி ஆறானது வறண்டு பாறைகள் வெளியே தெரிந்தன.
இந்தியாவின் நயகரா என அழைக்கப்படும் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் உள்ள பெரும்பாலான நீர்வீழ்ச்சிகள் வறண்டு பாறைகளாகக் காட்சி அளித்தன. கோடை விடுமுறைக்கு ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Advertisement
இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, வறண்ட நீர்வீழ்ச்சிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வழக்கத்துக்கு மாறாக ஓரடி உயரத்துக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததாக பரிசல் ஓட்டிகள் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சில நாள்களாக தொடர்ந்து பெய்யும் மழையால், ஒகேனக்கல்லில் பாயும் காட்டாறான சின்னாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பல மாதங்களுக்குப் பிறகு ஒகேனக்கல்லில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள், பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.