முகப்பு
தமிழ்நாடு

தென்காசி, புளியங்குடி பகுதியில் கனமழை; இடி தாக்கி பெண் பலி

தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. புளியங்குடி அருகே இடி தாக்கியதில் பெண் ஒருவர் இறந்தார்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 2:42 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. புளியங்குடி அருகே இடி தாக்கியதில் பெண் ஒருவர் இறந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான மழையும் பெய்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் திடீரென தட்பவெப்ப நிலை மாறி பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

Advertisement

தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக தென்காசி, மேலகரம் பகுதியில் இரவில் மின்தடை ஏற்பட்டது.

பெண் பலி: புளியங்குடி வேட்டரம்பட்டி அருகே கீழ திருவேட்டநல்லூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சாமி, விவசாயத் தொழிலாளி. இவருடைய மனைவி குமரம்மாள் (54).

ஞாயிற்றுக்கிழமை மாலையில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்தபோது, வீட்டுக்கு வாசலில் நின்றுகொண்டிருந்த குமரம்மாள், இடி தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.