அரசு நிலங்களுக்கு பட்டா வழங்கும் ஆணையை ரத்து செய்யக் கோரி மனு
அரசு நிலங்களுக்கு பட்டா வழங்கும் ஆணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நிலங்களுக்கு பட்டா வழங்கும் ஆணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: நிலம் இல்லாத ஏழைகள் பயன் பெறுவதற்காக பட்டா வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 23-ஆம் தேதி தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. அதில், எந்தெந்த நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; அரசு நிலங்களில் குடியிருப்பவர்களிடம் இருந்து பட்டா கேட்டு எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன என்ற விவரங்கள் இல்லை.
அதனால், இந்த அரசாணையை நில அபகரிப்பாளர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். அடையாளம் தெரியாத நபர்களின் பெயர்களில் பட்டா வாங்கிக் கொள்கின்றனர். தற்போது, நீர்நிலை பகுதிகளிலும் அவர்கள் பட்டா பெறுகின்றனர்.
Advertisement
நான் திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய சில மாவட்டங்களுக்கு சென்றபோது அங்குள்ள அணை, ஆறு மற்றும் குட்டைகளைப் பார்த்தேன். அவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விளைச்சல் நிலங்களாக இருந்தவை. தற்போது காய்ந்து வறண்ட நிலங்களாக மாறி இருந்தன. மேலும், நீர்நிலைப் பகுதியில் பட்டா வழங்குவதால் குளம், ஆறு, குட்டைகளில் நீர் தங்காமல் குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகிவிடும். இது பொது மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசு வெளியிடும் ஆணைகளின் மூலம் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, நில அபகரிப்பாளர்களுக்கு உதவும் விதத்தில் இருக்கக் கூடாது. ஆனால் இந்த அரசாணை பொது மக்களுக்கு பயன்படும் அளவில் இல்லை. இது குறித்து கடந்த ஜூலை மாதம் அரசுக்கு மனு அனுப்பினேன். ஆனால் அதற்கு பதில் இல்லை.
அதனால், அந்த அரசாணையை ரத்து செய்து, நீர்நிலைகளில் பட்டா வழங்குவதற்கு தடை செய்ய வேண்டும். அரசு நிலங்களில் பட்டா வழங்குவதை ஒழுங்குபடுத்தி, பட்டா கேட்டு வரும் விண்ணப்பங்களை நிராகரிக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துனர்.