இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மனு
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எல்.டி.ஏ.பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், பாதுகாப்புத் துறை அமைச்சகமுகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், 1983-ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களுக்கு எதிராக நடத்தும் மனித உரிமை மீறல்களையும், அதை கடலோரக் காவல்படை தடுப்பதற்கு தவறியதையும், உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும்.
இலங்கைக் கடற்படையால் இதுரை 378 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் தமிழக மீனவர்கள் 57 பேரை இலங்கைக் கடற்படை கடத்திச் சென்றது.
Advertisement
அவர்களை விடுவிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதனால், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும் மத்திய வெளியுறவுத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவில் தமிழக மீனவர்கள் மீன்பிடி எல்லையைத் தாண்டியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய கருத்தை தெளிவாக விவரிக்கவும் உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.