தாது மணல் குவாரிகளை அரசுடமையாக்க வேண்டும்
தாது மணல் குவாரிகளை அரசுடமையாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தாது மணல் குவாரிகளை அரசுடமையாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடியில் நடைபெற்றதாகக் கூறப்படும் தாது மணல் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் குழு, இன்னும் ஓரிரு நாள்களில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
Advertisement
தாது மணல் கொள்ளை தொடர்பான முக்கிய ஆதாரங்கள் இந்தக் குழுவின் ஆய்வில் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மிகப் பெரிய அளவில் தாது மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை.
இதனால் அந்த இரு மாவட்டங்களிலும் தாது மணல் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்கும் அரிய வகை தாது மணல்களை வெட்டி எடுத்து, அவற்றிலிருந்து இந்திய அணுசக்தித் துறைக்குத் தேவையான மோனாசைட், இல்மனைட் ஆகிய தாதுக்களையும் மிகப்பெரிய அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தரும் கார்னெட் தாதுவையும் பிரித்தெடுப்பதற்காக இந்திய அருமணல் நிறுவனத்தை 50 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு தொடங்கி நடத்தி வருகிறது.
சில தனியார் நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் துணையுடன் இந்த மாவட்டங்களில் கிடைக்கும் தாது மணல் முழுவதையும் மொத்தமாக வெட்டி எடுத்து விடுவதால் அருமணல் ஆலைக்குப் போதிய அளவு தாது மணல் கிடைக்கவில்லை.
இதனால் அருமணல் ஆலை அதன் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் 30 சதவீத அளவுக்கே தாதுக்களை உற்பத்தி செய்கிறது.
நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான மோனாசைட் தாதுப் பொருளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் உரிமை இப்போது தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், அது நமது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.
எனவே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள தாது மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.