முகப்பு
தமிழ்நாடு

மக்கள் பணி தொடரும்

தேமுதிகவுக்கு எதிர்ப்புச் சூழல்கள் இருந்தாலும் கட்சியின் மக்கள் பணி தொடரும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Updated On : 12 செப்டம்பர் 2013, 1:54 am IST
பகிர்:

தேமுதிகவுக்கு எதிர்ப்புச் சூழல்கள் இருந்தாலும் கட்சியின் மக்கள் பணி தொடரும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தேமுதிக 9-ஆம் ஆண்டில் செப்டம்பர் 14-ஆம் தேதி அடியெடுத்து வைக்கிறது.

Advertisement

Advertisement

ஒரு கட்சியை ஆரம்பிப்பது சுலபம். ஆனால் தொடர்ந்து நடத்துவது மிகவும் கடினம். தேமுதிக வளர்ந்து வருவதற்கு மக்கள் ஆதரவும் தொண்டர்கள் உழைப்பும்தான் காரணம்.

கடந்த ஆண்டுகளில் தேமுதிக சந்தித்த சோதனைகள் பல.

ஆளும் கட்சியினரின் பொய் வழக்குகளால் தேமுதிகவினர் பட்ட அவதிக்கு எல்லையே இல்லை.என் (விஜயகாந்த்) மீதும், என் குடும்பத்தினர் மீதும் போடப்படும் அவதூறு வழக்குகளுக்கும் பஞ்சமே இல்லை.

இவை எல்லாவற்றையும் சமாளித்து இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றி வருகிறோம்.

எதிர்க் கட்சிகளே இருக்கக்கூடாது என்கிற சர்வாதிகார எண்ணம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.

எனவே, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை தேமுதிகவுக்கு உண்டு. இந்த நிலையிலும் மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்க தேமுதிக தவறவில்லை.

உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தீராத மின்பற்றாக்குறை என பல்வேறு சிரமங்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.

தேமுதிக எதிர்க்கட்சி என்ற முறையில் இவற்றையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கிறது. எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும் மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறோம்.

எந்த ஆர்ப்பாட்டத்திலும் வன்முறை தலைதூக்குவதை நாம் அனுமதிப்பது இல்லை.

அதனாலேயே மக்கள் நம்மை ஆதரித்து வருகின்றனர் என்பது உண்மையாகும்.

9-ஆம் ஆண்டைத் துவக்கும் நேரத்தில் இதுவரையில் ஓயாது உழைத்தது போலவே, மேலும் மக்கள் பணி தொடரும் என்பதைத் தெரிவிக்கிறேன்.

தேமுதிகவின் தொடக்க நாளை (செப். 14) கட்சியினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.