வடதமிழகத்தில் கனமழை தொடரும்
வட தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழத்தின் வட மாவட்டங்களிலும், புதுவையிலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
Advertisement
Advertisement
புதன்கிழமை காலை வரை பெய்த இந்த மழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த மழை, அடுத்த 48 மணிநேரத்துக்கு தொடரும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியது:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கடலோர ஆந்திரம் மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.
மேலும் காற்றின் மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சியின் காரணமாகவும் வடதமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது.
இந்த மழை மேலும் 48 மணிநேரத்துக்கு தொடரும். தென்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.
புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): தாமரைப்பாக்கம், சென்னை - 120, திருத்தணி, சோளிங்கர், கேளம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் - 110, பள்ளிப்பட்டு - 10, அரக்கோணம், தாம்பரம், செம்பரம்பாக்கம் - 90, திருவாலங்காடு, கலவை - 80, பூந்தமல்லி, பூண்டி, ஏற்காடு - 70, ஆரணி, காஞ்சிபுரம் - 60, வாலாஜா, சோழவரம், திருவள்ளூர், வேலூர் - 50, ஓமலூர், குடியாத்தம், வந்தவாசி, கீரனூர், மகாபலிபுரம் - 40, திருச்சி, செய்யாறு, பொன்னேரி, உத்திரமேரூர், மாதவரம், செங்கல்பட்டு, லால்குடி - 30, மதுராந்தகம், எண்ணூர், தரங்கம்பாடி, திருச்சி நகரம் - 20, சமயபுரம், கோவை, கல்லணை, தருமபுரி, ஒரத்தநாடு, கரூர் பரமத்தி, சேலம் - 10.