சுற்றுலாத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்தத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
சென்னை சுற்றுலாத் துறை வளர்ச்சி நிறுவன வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அவர் மேலும் பேசியதாவது:-
முக்கியச் சுற்றுலாத் தலங்கள் உள்ள நகரங்களில் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆன்மிக சுற்றுலாத் தலங்களான திருக்கடையூர், திருக்கோஷ்டியூர், ராமேசுவரம், பழனி, ஸ்ரீவாஞ்சியம், ஆயக்குடி, நவக்கிரக கோயில்கள் போன்ற பகுதிகளில் வழிகாட்டுப் பலகைகள் அமைத்தல், சாலையோர அமரும் இருக்கைகள், குப்பைத் தொட்டிகள், பொதுக் கழிவறைகள், ஒளி விளக்குகள் போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் மூலம் திருச்சி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் மின்விளக்கு அலங்காரப் பணி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் ஹர் சகாய் மீனா, பொது மேலாளர் கவிதா ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.