தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ஹிந்து மதத்தைப் பின்பற்றும் தாழ்த்தப்பட்டோரை மட்டுமே அட்டவணை சாதிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என 1950 ஆகஸ்ட் 10 -ஆம் தேதி குடியரசுத் தலைவரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக கிறிஸ்தவம், இஸ்லாமிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோர் எஸ்சி பட்டியலில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்டனர்.
எனவே, அரசின் கவனத்தை ஈர்க்க அந்த நாளை தலித் கிறிஸ்தவர்கள் கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இவர்களின் இந்த அறப்போராட்டம் வெற்றியடைய விடுதலைச் சிறுத்தைகள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 'ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்' தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அறிக்கை அளித்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும்கூட, மத்திய அரசு அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரை மட்டும் எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் வஞ்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பதாகும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.