சென்னை: சொந்த காரணங்களுக்காக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஆளுநருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்வராக வரும் 7-ம்தேதி அல்லது 9-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குவழி விடும் வகையில் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கவர்னருக்கு பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சொந்த காரணங்களுக்காக தனது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தமது தலைமையிலான அமைச்சரவையையும் விடுவிக்குமாறு ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.