தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிமுகவில் தற்போது நடைபெறும் அதிகாரப் போட்டியால் அரசியல் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால், தமிழகத்தில் நிலையான ஆட்சி ஏற்படுமா? ஏற்படாதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது வலுத்து வருகிறது.
எனவே, தமிழக ஆளுநர் உண்மை நிலையை முற்றிலுமாக உணர்ந்து கொண்டு, சட்ட வல்லுநர்களை ஆலோசித்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், சட்டத்துக்கு உட்பட்டு ஜனநாயக மரபுகளைக் காக்க, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர் முடிவெடுத்து, தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் அசாதாரண சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.