அதிமுக தொண்டர்களை ஒன்று திரட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய வியூகம் வகுத்து, விரைவில் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவருடன் தீபாவும் பயணிக்க உள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் பிரசார வாகனம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் மேற்கொள்வது- அவருக்கு ஜெயலலிதா ஆசி செய்வது போன்ற படத்துடன் வாகனத்தில் உள்ளன.
ஆர்.கே.நகரில் தொடங்கி, தீபாவுடன் இணைந்து...: அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலாவுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து வேனில் பிரசாரம் செய்ய உள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்க இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
புதிய பிரசார வியூகம்: மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை திடீரென சென்றபோது, தீபா வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, "இரு கரங்களாகச் செயல்படுவோம். கட்சியையும், ஆட்சியையும் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்போம்' என அவர்கள் தெரிவித்தனர்.
124 தொகுதிகளில்...:இதைத் தொடர்ந்து, தொண்டர்களை ஒன்று திரட்ட இருவரும் இணைந்து பிரசாரப் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.
குறிப்பாக, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள 124 அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு நேரில் சென்று தொண்டர்களையும் பொது மக்களையும் சந்திக்க உள்ளனர்.