எடப்பாடி பழனிசாமி நிலையான முதல்வராக நீடிப்பது சந்தேகம்தான் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. குடும்ப ஆட்சி முறை வேண்டாம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றுவிட்ட நிலையில், சசிகலா தனது சகோதரி மகனை அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக ஆக்கியுள்ளார்.
முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சசிகலா தரப்பினரின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருக்கிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுமையாக இருக்காது. இவர் நிலையான முதல்வராக நீடிப்பது சந்தேகம்தான்.
வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தமிழக எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாகவும், மிகுந்த பொறுப்புடனும் செயல்பட வேண்டும். தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வருவதை மக்கள் விரும்பவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முழுமையாகவும், சிறப்பான முறையிலும் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நிலைமை இருக்குமா என்று தெரியவில்லை என்றார்.