தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நியாயமற்றது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் இதற்கு முன்னர், மூன்று முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் நடைபெற்றது கிடையாது.
எனவே, ரகசிய வாக்கெடுப்பு என்ற திமுகவின் கோரிக்கை நியாயமற்றது. ஆனால், ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு போன்றவர்கள் கூட ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்வது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தபோது, அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று சொன்ன ஸ்டாலின், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என கேட்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.