மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றாவிட்டால், பாமக சார்பில் தடையை மீறி ஜனவரி 26-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மக்கள் பிரச்னைக்காக மாணவர்கள் போராட வேண்டும் என்பதுதான் பாமகவின் நீண்ட நாள் விருப்பம். பாமக எதிர்பார்த்த மாற்றம் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் முன்னேற்றத்துக்குத் தேவையான மற்ற விஷயங்கள் இனி தானாக நடக்கும்.
மாணவர்களின் போராட்டத்தை மதித்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்.
அடுத்த 2 நாள்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தால் குடியரசு நாளான ஜனவரி 26-ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாமக சார்பில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகள் தடையை மீறி அமைதியாக நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.