சட்ட வல்லுநர்களின் விளக்கத்துக்குப் பிறகு மெரீனாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.17) முதல் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்தும்கூட, "ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரச் சட்டம வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைக் கைவிட மறுத்து வந்தனர்.
இதையடுத்து மெரீனா கடற்கரையில் திங்கள்கிழமை (ஜன.23) காலை ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டவரைவு விதிகளை அளித்தனர். ஆனால், நிரந்தரத் தீர்வு கிடைத்த பிறகே போராட்டத்தைக் கைவிடுவதாக இளைஞர்கள் கூறினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோரை வலுக்கட்டாயமாக போலீஸார் அப்புறப்படுத்தத் தொடங்கினர். பெரும்பாலான இளைஞர்கள் தாமாகக் கலைந்து சென்றனர்.
ஆனால், 3,000-த்துக்கும் மேற்பட்டோர் கடலையொட்டியவாறு தொடர் போராட்டத்தில ஈடுபட்டனர். அவசரச் சட்ட நகலை போலீசாரிடமிருந்து பெற்று, ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரத் தீர்வு கிடைத்துள்ளது குறித்து போராட்டக்காரர்களிடம் சட்ட வல்லுநர்கள் விளக்கினர்.
இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துள்ளதை வரவேற்று போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.