ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கலாம் என்ற தீர்மானத்தை அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து கொண்டு வர உள்ளன.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு எந்தத் திசையிலிருந்து அழுத்தம் வந்தாலும், அதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க மறுத்து வருகிறது. இது ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் மட்டுமல்ல; மனித உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.
ஐ.நா.வின் உத்தரவுக்கே இலங்கை அரசு கட்டுப்பட மறுப்பதும், அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கை கொடுப்பதும், மனித உரிமைகள் வரலாற்றில் அழிக்க முடியாத கருப்பு அத்தியாயமாக ஆகிவிடும்.
எனவே, போர்க்குற்ற விசாரணையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தை இந்தியா ஆணித்தரமாக எதிர்த்து வாதிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.