கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 900 பேர் 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சனிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நெடுந்தீவு பகுதிக்கு நள்ளிரவில் வந்த இலங்கை கடற்படையினர் அங்கு ஜெகதாப்பட்டினம் எஸ். செல்லப்பன் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த செ. பிரகாஷ் (30), சி. முருகேசன் (45), மு. வைத்தி (50), சதாம்உசேன் (20), ரபீக் (45), எஸ். ராஜகோபால் (52) ஆகிய 6 பேர், கோட்டைப்பட்டினம் ஜபருல்லாகான் என்பவரது படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த எஸ். ராஜா (42), ஆர். சீனியப்பா (35), எம். ரமேஷ் (30), எஸ். மணி (25), ஜெ. முகமதுகாசீம் (50), கே. துரைராஜ் (45) ஆகிய 6 பேர் என 12 மீனவர்களை கைதுசெய்து படகுடன் விசாரணைக்காக இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்குக் கொண்டுச் சென்றனர்.
இதனால் சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 22 ஆம் தேதி இதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுகை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.