அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் வியாழக்கிழமை (மே 4) தொடங்குகிறது.
தமிழகத்தில் ஏப்ரலில் வெயில் உக்கிரமாகி தமிழகத்தில் சில பகுதிகளில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசியது.
அக்னி நட்சத்திரம்: கோடையின் உச்சம் என்று கருதப்படும் அக்னி நட்சத்திர காலம் மே 4-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி முடிகிறது. இந்த நாள்களில் வழக்கத்தைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும், அனல் காற்றும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது கடல் பகுதியில் இருந்து நிலப்பரப்புக்குள் காற்று நுழைவதால், வெப்பத்த்தின் தாக்கம் சற்று குறைந்து, ஈரப்பதமான காற்று வீசுகிறது. ஆனால் இன்னும் இரு தினங்களில் இந்த நிலை மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடை மழை: செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, உதகமண்டலத்தில் 60 மி.மீ., பீளமேட்டில் 50 மி.மீ, நீலகிரி மாவட்டம் குன்னூர், வால்பாறை, பவானி, தேன்கனிக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் 40 மி.மீ. மழை பெய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்று வீசக்கூடும், என்றனர்.
6 இடங்களில் வெயில் சதம்: செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் குறைவாகப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக 6 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது.