கோயில் தரிசனத்திற்கு பாகுபாடு காட்டக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கோயில்களில் இலவச தரிசனம் செய்பவர்களுக்கும், சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கும் ஒரே தூரத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய....
சென்னை: கோயில்களில் இலவச தரிசனம் செய்பவர்களுக்கும், சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கும் ஒரே தூரத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
புகழ்பெற்ற கோயிகளில் சிறப்பு கட்டணம் பெற்று சுவாமி சிலைக்கு அருகில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்குத் தடை விதிக்கக் கோரி அரவிந்த் லோச்சுனன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சிறப்பு கட்டணம் செலுத்துவோர் சுவாமி சிலைக்கு அருகில் நின்று நீண்ட நேரம் சுவாமி தரிசனம் செய்வதாகவும், இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால், சிறப்பு தரிசனத்திற்கு தடை விதிக்க வாதிட்டார்.
Advertisement
இதையடுத்து, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதித்தனர். அதே நேரத்தில் சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களும், இலவச தரிசனம் செய்யும் பக்தர்களும் ஒரே தூர இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இனி சிறப்பு கட்டணம் செலுத்துபவர்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்று தான் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிட்டதக்கது.