திருச்சி: நீட் விவகாரம் தொடர்பாக வரும் 16-ஆம் தேதி அதிமுக அம்மா அணி துணைபொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நடத்த திட்டமிட்ட பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்வி பயில இடம் கிடைக்காததால், தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தினை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக 'நீட்' தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் பொதுநல வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்குகின்ற வகையில் எந்தவிதமான போராட்டத்திற்கும் அனுமதி கிடையாது என்று கூறி தடை விதித்தது.
அதே நாளன்று திருச்சி தென்னூரில் அமைந்துள்ள உழவர் சந்தை மைதானத்தில் திமுக ஏற்பாடு செய்திருந்த கண்டன கூட்டமானது மிகுந்த குழப்பங்களுக்கு பிறகு நடந்தேறியது. அப்பொழுதே நீட் விவகாரம் தொடர்பாக 16-ஆம் தேதி அன்று அதிமுக அம்மா அணி சார்பாக பொதுக் கூட்டம் நடைபெறும் என்று துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்தார்.
இதனிடையே பாஜகவும் தங்கள் பங்கிற்கு நீட் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை அதே இடத்தில் நடத்தியது. இந்நிலையில் அதிமுக அம்மா அணி துணைபொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வரும் 16-ஆம் தேதியன்று நடத்த திட்டமிட்ட பொதுக் கூட்டத்திற்கு, திருச்சி மாநகராட்சி அனுமதி தரவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.