டிடிவி திருச்சி பொதுக்கூட்டத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி
டிடிவி தினகரன் அணி சார்பில் திருச்சியில் 19-ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் கடந்த 12-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, அதனை ரத்து செய்வதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதையடுத்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் 16-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் அறிவித்தார். இதனிடையே அதே தேதியில் வேறு ஒருவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் டிடிவி பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி அனுமதி மறுத்தது.
Advertisement
இந்நிலையில், அதே திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் வருகிற 19-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனவே இதற்கு அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டிடிவி தினகரன் தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதனா விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, திருச்சியில் செப்டம்பர் 19-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.