முகப்பு
தமிழ்நாடு

செல்லிடப்பேசி பறிமுதல் வழக்கு: அதிகாரியிடம் குறுக்கு விசாரணை செய்த முருகன்

சிறையில் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன், விசாரணை அதிகாரியிடம் ஒரு மணிநேரம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:00 am IST
பகிர்:

சிறையில் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன், விசாரணை அதிகாரியிடம் ஒரு மணிநேரம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவரது அறையில் இருந்ததாக 2 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதுதொடர்பாக, பாகாயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1-இல் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

கடந்த வாரம் 9-ஆம் தேதி நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின் போது சாட்சியளித்த சிறை அதிகாரிகள் 7 பேரிடம் முருகன் குறுக்கு விசாரணை நடத்தினார். இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, 28-ஆவது முறையாக முருகன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான பாகாயம் உதவி காவல் ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்ற பாஸ்கரிடம் முருகன் குறுக்கு விசாரணை நடத்தினார். 

பகல் 11.45 மணிக்கு தொடங்கி மதியம் 12.50 மணி வரை இந்த குறுக்கு விசாரணை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமையுடன் குறுக்கு விசாரணை முடிந்ததால், இனி இரு தரப்பு வாதம் நடைபெற உள்ளது. 

இதையடுத்து, வழக்கின் விசாரணையை வியாழக்கிழமை (ஏப்ரல் 19) ஒத்திவைத்து நீதிபதி அலிசியா உத்தரவிட்டார். பின்னர், முருகன் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.