தினகரனை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்து கொள்வோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
மேகதாது விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நேற்றைக்கு முன்தினம் நீதிமன்றத்திலே 4 வாரத்திற்குள் மத்திய நீர்வள ஆணையமும், கர்நாடக அரசும் உரிய அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கின்றது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதாக கர்நாடக அமைச்சர் மீதும், அவருடைய அதிகாரிகள் மீதும், நீர்வள குழும் அதிகாரிகள் மீதும் அவமதிப்பு வழக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்திருக்கிறது. பிரிந்து சென்ற தொண்டர்கள் அனைவரும் எங்களோடு இணைந்து செயலாற்ற வேண்டுமென்று நானும், ஒருங்கிணைப்பாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். பல பேர் இணைந்திருக்கின்றார்கள். அமமுக கட்சியின் இராமநாதபுர அமைப்புச் செயலாளர் என் தலைமையில் நேற்றையதினம் கட்சியில் சேர்ந்திருக்கின்றார். தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் இணைந்து கொள்ளலாம் என்று. நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மாண்புமிகு அம்மாவினுடைய அரசு செய்து கொண்டு இருக்கிறது. 2 லட்சத்து 21 மின்கம்பங்கள் சாய்ந்திருக்கின்றன, கிட்டத்தட்ட 1600 டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்திருக்கின்றன, 196 துணை மின்நிலையங்கள் பழுதடைந்து விட்டன. அதையெல்லாம் இன்றைக்கு சரிசெய்து கொண்டிருக்கின்றோம், பெரும்பாலான இடங்களில் சரிசெய்யப்பட்டு விட்டது.
ஒருசில கிராமங்களில் உள்ள வீடுகள், வயல்பகுதியில் இருக்கின்ற வீடுகள், தூரமாக இருக்கின்ற வீடுகளுக்கெல்லாம் மின்கம்பங்கள் நடப்பட்டு, மின்இணைப்பு அளிப்பதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரணத் தொகையை பொறுத்தவரைக்கும், உரியவர்களுக்கு உரிய இழப்பீடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு, கஜா புயலினால் வீடு இழந்தவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தருவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.