திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தனது தோட்டத்தில் வேடசந்தூர் தொகுதி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பி.ஆண்டிவேல் புதன்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.ஆண்டிவேல். 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை வேடசந்தூர் தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். இவர் புதுரோடு பகுதியில் உள்ள வீட்டில் மனைவி ஆண்டாள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டம், எரியோடு அடுத்துள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை தனது தோட்டத்துக்கு சென்ற இவர், பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரது மனைவி ஆண்டாள் மற்றும் உறவினர்கள், அவரை தேடிய போது, தோட்டத்தில் உள்ள சிறிய அறையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. கீழே தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து எரியோடு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.