அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்கள் தங்கள் ஆவணங்களில் ஏதேனும் பிழை இருந்தால் அவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 22-ஆம் தேதி கடைசியாகும்.
இது தொடர்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2014 முதல் ஆகஸ்ட் 2017 வரை சேர்க்கப்பட்ட மாணவர்கள், சேர்க்கையின்போது வழங்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் மத்திய அரசால் தேர்வு நுழைவுச்சீட்டு, மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற் சான்றிதழ் ஆகியவை ஆன்-லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தால், அந்தப் பிழைகளை சரி செய்ய மத்திய அரசால் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களோடு, தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஓர் அலுவலகத்துக்குச் சென்று, உரிய ஆவணங்களைக் காண்பித்து மண்டல பயிற்சி இணை இயக்குநர் அவலுலகங்களில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.