மாணவர்கள் தினமும் ஒரு திருக்குறளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள் தெரிவித்தார்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் "திருக்குறள் விழா-18' என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, ஓவியப் போட்டி டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஸ்ரீராம் சிட்ஸ் தமிழ்நாடு (பி) லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் த.ரமேஷ் பார்த்திபன் தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அதிகாரி ஜார்ஜ் ஸ்டீபன் வரவேற்றார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள் பேசியதாவது: உலகப் பொதுமறையான திருக்குறள் இதுவரை 200-க்கும் மேற்பட்ட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் அண்மையில், கொரிய மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது. 8-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் எளிய முறையில் திருக்குறளைக் கற்றுக் கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வாழ்வில் சிறந்து விளங்க மாணவர்கள் நாளொரு திருக்குறளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்தப் போட்டியில் 120 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் உள்பட மொத்தம் 1,021 பேருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.