வணிக, குடியிருப்புக் கட்டடங்களுக்கு சொத்து வரி உயர்வு: நடப்பு அரையாண்டிலேயே அமல்
வணிகக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புக் கட்டடங்களுக்கு நடப்பு அரையாண்டுக் காலத்திலேயே சொத்து வரியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வணிகக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புக் கட்டடங்களுக்கு நடப்பு அரையாண்டுக் காலத்திலேயே சொத்து வரியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் அண்மையில் வெளியிட்ட உத்தரவு:
மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை ஒரு பொதுவான அளவுக்கு மாற்றியமைப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-இல் வெளியிடப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக ஆணையாளர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குநர்கள், நகர உள்ளாட்சி அமைப்புச் சட்ட விதிகளில் இப்போது அளிக்கப்பட்டுள்ள நிலை ஆணைகளைப் பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கட்டடங்களுக்கான சொத்து வரியை உயர்த்தக் கோரி அரசுக்கு தனித்தனியே கடிதங்கள் எழுதியுள்ளனர்.
குடியிருப்புக் கட்டடங்களுக்கு...குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், வாடகை குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் தகவல்: அதிகாரிகளின் கோரிக்கைக் கடிதங்கள் ஒருபுறமிருக்க, சென்னை உயர் நீதிமன்றமும் அரசுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பரிந்துரைத்துள்ள சொத்து வரி குறித்த பரிந்துரைகளின் மீது இரண்டு வார காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: அதன்படி, குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், வாடகை குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் அல்லாத கட்டடங்களுக்கு தலா 100 சதவீதத்துக்கு மிகாமலும் சொத்து வரி வசூல் செய்யலாம் என்ற பரிந்துரைகள் ஏற்கப்படுகின்றன. இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி நிர்வாக ஆணையாளர், பேரூராட்சிகள் இயக்குநர் ஆகியோர் தனித்தனியாக வெளியிடுவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.