மதுரை: இது ஜனநாயக நாடா? இல்லை போலீஸ் நாடா? என்று ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹரிராகவன் என்பவரது மனைவி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக எனது கணவர் ஹரிராகவன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவருக்கு கடந்த 24-ஆம் தேதி மாவட்ட கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆனால் அன்றே காவல்துறையினர் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புதிதாய் வழக்குப் பதிவு செய்து மீண்டும் கைது செய்து விட்டனர். இதனால் போலீசாரின் நோக்கம் குறித்து சந்தேகம் உள்ளதால் எனது கணவரை நேரில் ஆஜர் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவவறு அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவானது செவ்வாயன்று நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் கூறியதாவது:
ஹரிராகவனை குறிப்பாக ஜாமீன் வழங்கப்பட்ட நாள் அன்று கைது செய்யபட்டதன் பின்ணியில் உள்நோக்கம் உள்ளதா? இந்த கைது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முன்கூட்டி தகவல் தெரிவிக்கப்பட்டதா? இது ஜனநாயக நாடா? போலீஸ் நாடா?
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் புதனன்று காலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.