தேனி மாவட்டம், குரங்கணி மலையேற்றப் பயிற்சிக்கு ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேரை அழைத்துச் சென்ற சென்னிமலையைச் சேர்ந்த சுற்றுலா முகவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை, காட்டூர் சாலையை சேர்ந்த தண்டபாணி மகன் பிரபு (30). ஈரோட்டில் சுற்றுலா அலுவலகம் நடத்திவரும் இவர், தனது முகநூல் நண்பர்களான ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேரை தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதிக்கு கடந்த 9-ஆம்தேதி அழைத்துச் சென்றுள்ளார்.
இதில், ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார், கண்ணன், விவேக், சக்திகலா, சவிதா, திவ்யா, நேகா, தமிழ்ச்செல்வன், திருப்பூரைச் சேர்ந்த ராஜசேகர், சாதனா, பாவனா ஆகியோர் சென்றுள்ளனர். மலையேற்றத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். இதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இவ்விபத்து குறித்து தேனி மாவட்ட போலீஸார், சுற்றுலா முகவரான சென்னிமலையைச் சேர்ந்த பிரபுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். மலையேற்றப் பயிற்சிக்கு வனத் துறையினரின் அனுமதி பெறப்பட்டதா, முறையான தகுதியுடன் மலையேறிச் சென்றவர்கள் இருந்தனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. தேனி மாவட்ட போலீஸாரிடம் விரிவான வாக்குமூலத்தை பிரபு பதிவு செய்துள்ளார்.