புது தில்லி: தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசுக்கு உதவத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
தமிழக தலைமை செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கௌபா, சூழ்நிலையை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு, தேவையான உதவிகளை செய்யத் தயார் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய நிலைமை கட்டுக்குள் இருக்கிறதா என்று கேட்ட ராஜீவ் கௌபா, தூத்துக்குடியில் தற்போதைய நிலை, நேற்று நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு குறித்தும் முக்கிய விவரங்களை கேட்டறிந்து கொண்டார்.
தூத்துக்குடியில் கூடுதல் பாதுகாப்புக்கு, கூடுதல் துணை பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டுமா? என்று கேட்ட ராஜீவ் கௌபா, தேவைப்பட்டால் சிஆர்பிஎஃப் படைகளை அனுப்ப வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுக்கும்பட்சத்தில், தமிழகத்துக்கு படைகளை அனுப்பத் தயாராக இருபபதாகவும் தெரிவித்தார்.