தீய எண்ணங்களைப் போக்கி, நல்லவர்களாக மாற வேண்டும்: தருமபுரம் ஆதீனம் தீபாவளி ஆசியுரை
மக்கள் தமக்குள் இருக்கும் தீய எண்ணங்களைப் போக்கி, நல்லவர்களாக மாறும் நாளாக இறைவனை வேண்டி,
மக்கள் தமக்குள் இருக்கும் தீய எண்ணங்களைப் போக்கி, நல்லவர்களாக மாறும் நாளாக இறைவனை வேண்டி, தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தீபாவளி ஆசியுரை வழங்கியுள்ளார்.
அவர் வழங்கிய ஆசியுரை:
நாட்டில் தர்மத்துக்கு சோதனை வரும் நேரத்தில் எல்லாம் இறைவன் தனது அருட் சக்தியைக் கொண்டு, ஒரு சிருஷ்டியை உருவாக்கி, தர்மத்தை நிலைநாட்டி வருகிறார்.
துவாபர யுகத்தில் கிருஷ்ணரின் அவதாரத்தால் அழிந்தவன்தான் நரகாசுரன். கிருஷ்ணரால் தன்அழிவை உணர்ந்த நரகாசுரன் தன் அழிவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இறைவனிடத்தில் விண்ணப்பம் செய்து கொண்டான். அதனடிப்படையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி இந்திய நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் தேசிய திருவிழாவாக விளங்குகிறது. ஒருவரின் இறப்பில் தீபம் ஏற்றுவது வழக்கம். அவ்வகையில்தான் நரகாசுரன் வதமான நாளாகிய தீபாவளி அன்று தீபம் ஏற்றி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று மட்டும் எண்ணெய்யில் மகா லெட்சுமியும், வெந்நீரில் கங்கையும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். எனவே, விடியற்காலையில் எண்ணெய்த் தேய்த்து நீராடவேண்டும். அதனால்தான் கங்கா ஸ்நானம் ஆச்சா எனக் கேட்பர்.
நரகன் வீழ்ந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தெரிந்த மக்கள், தமக்குள் இருக்கும் தீமையான எண்ணங்களைப் போக்கி நல்லவர்களாக மாறும் நாளாக எண்ணி இறைவனை வழிபட்டு கொண்டாடவேண்டும்.
இந்நாளில் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று வளமுடன் வாழ, எல்லாம் வல்ல ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம் என தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் தனது ஆசியுரையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.