வான்வழிப் பாதுகாப்புப் பிரிவு போட்டி: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது தமிழக என்சிசி அணி!
வான்வழிப் பாதுகாப்பு குறித்து, என்சிசி மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட போட்டித் தொடரில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
வான்வழிப் பாதுகாப்பு குறித்து, என்சிசி மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட போட்டித் தொடரில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
புதுதில்லியில் உள்ள என்சிசி தலைமை அலுவலகத்தில் அண்மையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதிலும் உள்ள 16 என்சிசி இயக்ககங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். குறிப்பாக தமிழகம் - புதுச்சேரி - அந்தமான் மற்றும் நிக்கோபார், ஜோத்பூர், ராஜஸ்தான் போன்ற இயக்ககங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
விமானப்படை, வான்வழிப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட இந்தப் போட்டித் தொடரில் தனிநபர் பிரிவு மற்றும் ஒட்டுமொத்த அணிகள் பிரிவில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது. தமிழக அணி தொடர்ச்சியாக பெறும் 2-ஆவது வெற்றி இதுவாகும்.
தனிநபர் மாணவ - மாணவியர் பிரிவில் ஜெயந்த் குமார் என்ற மாணவர் தங்கப் பதக்கத்தையும், பி.கெளசல்யா என்ற மாணவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். விமானத் தொழில்நுட்பப்பிரிவில் நடத்தப்பட்ட மற்றொரு பிரிவில் மெல்வின் ஜார்ஜ், எஸ்.ராஜசேகர் ஆகிய மாணவர்கள் தங்கப் பதக்கத்தையும், லியானோர்ட் செல்வா, கணேஷ் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர். விமானத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவுக்கு நடத்தப்பட்ட போட்டியில் இன்ஃபான்ட் ராஜ், புவனேஷ்வரி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
பதக்கம் வென்ற தமிழக அணி என்சிசி மாணவர்களுக்கும், அணியில் இடம்பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தமிழகம் - புதுச்சேரி - அந்தமான் மற்றும் நிக்கோபார் என்சிசி இயக்ககத்தின் துணைத் தலைமை இயக்குநர் விஜேஷ் கே.கர்க் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.