மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1,020 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் இயங்கி வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஓர் அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். மேட்டூர் அனல் மின் நிலையத்தை இயக்க நாளொன்றுக்கு 28,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. புதன்கிழமை (செப்.19) நிலவரப்படி, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சுமார் 72 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது.
கடந்த சனிக்கிழமை மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் உள்ள இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது அலகிலும் நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இரண்டாவது அலகில் பழுது நீக்கம் செய்யப்பட்ட பிறகும் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதால், உற்பத்தி தொடங்கப்படவில்லை. கடந்த நான்கு நாள்களாக 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகலில் இரண்டாவது பிரிவில் உள்ள 600 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அலகிலும் நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மொத்ததில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.