இயற்கை வளத்தைக் காக்க தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் வகையில் இரண்டு வாரங்களுக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் மணல் கொள்ளை, விலையேற்றம் ஆகியவை தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, இதற்கு நல்ல தீர்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். மூடப்பட வேண்டிய மணல் குவாரிகளை மூடியிருக்க வேண்டும்.
அரசின் நேரடிக் கண்காணிப்பில் தேவையான மணல் குவாரிகளை இயக்கியிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாத தமிழக அரசுக்கு இப்போது உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. இது அரசுக்கு அவப் பெயராகும்.
இனியாவது, நீர் ஆதாரம், இயற்கை வளம் ஆகியவற்றில் தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி, அவற்றைத் தேவைக்கேற்ப மக்கள் பயன்படுத்திப் பயன் பெற, தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.